தளமுகப்பு பதிவுகள் என்னை-தெரியுமா? தொடுப்புகள் தரவிறக்கம் மென்-நூல்கள்   நிலாமுற்றம் தள-செய்திகள்  
நிலா முற்றம்
விரைவில் உங்களுக்காக, உங்களுடன்...




22.12.08

கன்னியாகுமரி பாகம் (2)

-------------------------------------------------------
ஸ்ரீதேவி பகவதி அம்மன் கோவிலின் விழாக் காலங்கள்.

வைகாசி விசாகத் திருவிழா 10 நாட்கள்
ஆடி அம்மாவாசை
நவராத்திரி திருவிழா 10 நாட்கள் மற்றும் பரிவேட்டை
திருகார்த்திகை திருவிழா
தை அம்மாவாசை

இத்திருநாட்கள்
யாவும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன. இத் திருவிழா காலங்களில் அம்மனுக்கு சிறப்பாக அலங்கரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

தினமும் மூன்று கால பூஜைகள் நடைபெறுகின்றன.

காலை 5.30 மணிக்கு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெறும்.
மதியம் 1.00 மணிக்கு உச்சிகால பூஜையும்
மாலை 6.30 மணிக்கு சாயங்கால பூஜையும் நடைபெறுகின்றது

அம்மனுக்கு சந்தனகாப்பு மற்றும் நகை அலங்கரம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கோவிலில் அம்பாள் கிழக்கு நோக்கி நின்று தனியாக தவக்கோலத்தில் கையில் ஜெபமாலையுடன் அருள்பாலிக்கிறார்.

இந்திரகாந்த வினாயகர், நாகராஜர், பாலசௌந்தரி அம்மன், தியாகசௌந்தரி அம்மன்,மற்றும் கால பைரவர் ஆகிய உப தெய்வங்களும் உள்ளன. ஸ்ரீ தர்ம சாஸ்தாவுக்கு தனியாக ஆலயம் உள்ளது கோவிலில் குங்குமம் மற்றும் சந்தனம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்படுகிறது. கோவில் கன்னியாகுமரி மாவட்ட இந்து அறநிலைய துறையின் கட்டுப்பட்டில் உள்ளது.

பரிவேட்டை திருவிழா.

பாணாசுரவதம் - இதுவே பரிவேட்டை திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பாணாசுரன் எனும் அரக்கன் சிவனை நோக்கி தவமிருந்து ஒரு வரம் பெற்றான், அவ்வரத்தின் படி, தான் ஒரு கன்னிபெண்ணால் மட்டும் கொல்லப்பட வேண்டும். பாணாசுரனை வதம் செய்வதற்க்காக பார்வதி தேவி, பகவதி அம்மன் அவதரித்தார்.மலையத்வஜன் மகளாய் பிறந்தது வளர்ந்து வந்தார், கன்னியாக இருக்கும் போது சிவபெருமான் அம்பாள் மீது மிகுந்த காதல் கொண்டு மணந்துகொள்ள விரும்பினார். அவர் மலையத்வஜனிடம் பெண் கேட்டு சென்றார். தேவியானவர் மூன்று நிபந்தனையுடன் திருமணத்துக்கு சம்மதிதார். நிபந்தனையாவது - கண் இல்லாத தேங்காய், காம்பில்லாத வெற்றிலை, கணு இல்லாத கரும்பு ஆகிய பொருட்களுடன் சூரிய உதயத்துக்கு முன்பு கன்னியாகுமரிக்கு வருமாறு கோரினார். அம்மனின் நிபந்தனை பொருட்களுடன் சுசீந்திரத்தில் இருந்து புறப்பட்டார். வழுக்கம்பாறை அருகில் வரும்போது நாரதன் சேவலாய் மாறி விடியலை அறிவிப்பதை போல் கூவினான். இதனால் சூரிய உதயம் நிகழ்ந்துவிட்டதென எண்ணி சுசீந்திரம் திரும்பினார். நாரதமுனிவர் ஏன் சேவலாக மாறி கூவினார் என்றால் அம்பாளின் அவதார நோக்கம் கன்னியாகவே பாணாசுரனை வதம் செய்ய வேண்டும், இது நிறைவேற வேண்டும் என்பதற்காகத்தான். நவராத்திரி திருநாளில் பத்தாம் நாளான விஜயதசமி அன்று கன்னியாகுமரியில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பஞ்சலிங்கபுரம் - மஹாதானபுரம்(முன்னாளில் இப்பகுதி பாஞ்சாலிங்க மகாதானபுரம் என்று அழைக்கபட்டது)பகுதியில் வதம் செய்தார். இந்த நாளில் தான் பரிவேட்டை திருவிழா கொண்டாடப்பட்டுவருகிறது.

பரிவேட்டை சிறப்புகள்:

நவரத்திரி திருவிழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி முதல் திருநாளில் கோவிலின் கொலுமண்டபத்தில் அம்பாள் அலங்கார மேடையில் சிறப்புஅலங்கரத்துடன் வீற்றிருக்கிறார். நவராத்திரி கொலு படிகளும் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. ஒன்பது நாட்கள் சிறப்பு பூஜைகளுடன், சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றது. விஜயதசமி அன்று (பத்தாம் நாள்) காலை பூஜைக்கு பின் வெள்ளி குதிரை வாகனத்தில் அமர்ந்து மதியான அன்னதானத்திற்க்கு பின் யானைகள், குதிரைகள், முத்துக்குடை, நாதஸ்வரம், செண்டை, பொம்மலாட்டம், தையம், பஜனை, ஆகியவற்றுடன் ஊர்வலமாக வருகிறார். எலுமிச்சை பழத்தால் ஆன மாலை, வாழைப்பழம் பன்னீர், மற்றும் பூஜைப்பொருட்களுடன் சுருள்தனை காணிக்கையாக பக்தர்கள் தருகின்றனர். பல்லாயிர கணக்கான பக்தர்கள் சூழ விவேகானந்தபுரம், சுவாமிநாதபுரம், பரமார்த்தலிங்கபுரம், வழியாக காரியக்காரமடம் சென்று அதன் அருகில் உள்ள வேட்டை மண்டபத்திற்க்கு வந்து, மண்டபத்தை வெள்ளி குதிரை வாகனத்தில் மூன்று சுற்று சுற்றி வந்து, பின்னர் இளநீரில் அம்பால் குத்தி பாணாசுரனை வதம் செய்கிறார். இளநீரில் பாணாசுரன் இருப்பதாக உருவகம் செய்து குத்தபடுகிறது. பின்னர் அம்பாள் பஞ்சலிங்கபுரம், மகாதானபுரம் வழியாக மீண்டும் காரியக்காரமடம் சென்று இளைப்பாறி, பின் பல்லக்கில் ஏறி குமரிமுனை நோக்கி கோவிலை அடைகிறார், பின்னர் கோவிலின் கிழக்குவாசல் திறக்கப்பட்டு, குமரி கடலில் ஆரட்டு முடித்து கிழக்கு வாசல் வழியாக கோவிலுக்குள் சென்று அமர்கிறார்.

மூலம்: கதைகள் - முன் தலைமுறை செவிவழி செய்தி தொகுப்பு.

மேலும் பல‌ செய்திகள் எங்கள் வளங்குமரியை பற்றி பின் வரும் பதிவுகளில்‍...

24.11.08

கன்னியாகுமரி பாகம் (1)


கன்னியாகுமரி பாகம் (1)
-------------------------------

இந்திய தீபகற்பதின் தென் கோடியில் அமைந்துள்ளது கன்னியாகுமரி, இந்த மாவட்டத்திற்கு இப்பெயர் வர காரணமாக அமைந்தது, குமரியில் அமைந்துள்ள பகவதி அம்மன் திருகோவிலாகும். வரலாற்று பக்கங்களை பின்னோகி புரட்டினால் இதனை பற்றி பல விபரங்களை தெரியலாம்.


தங்கமென சுடர் விடும் கதிர் வங்கத்தில் !
நெருப்பென சிவக்கும் அரபி கடலில் !
தென்னையும் நெல்லும் வாழையுடன் கை கோர்க்கும்!
செந்தமிழ் பேசும் செந்தாமரை மலர் கொண்ட தடாகங்க‌ள்!
வெண்சங்கென குணம் கொண்ட சந்ததிகள் !
என்றும் குமரியாய் வள‌ம் தங்கும், உளம் எங்க‌ள் குமரி!


கன்னி+குமரி பகவதி, சுசீந்திரம் தாணுமாலயன் (தாணு = சிவன், மால்=விஷ்ணு, அயன்= பிரம்மா‍ மூவரும் சேர்ந்தமர்ந்த தலமாகும்)கோவிலில் உள்ள சிவனை மணம் செய்து கொள்ள கடும் தவம் மேற்கொண்டார், இதன் பயனாக சிவன் அருள்பாலித்தார், அதன்படி, பின்‍ இரவில் (சேவல் கூவும் அதிகாலை நேரத்திற்கு முன்பு) வந்து மணந்து கொள்வதாகவும் உறுதியளித்தார், பகவதிஅம்மனும் திருமணத்திற்கு தயாரானார். சுசீந்திரம், ஆலயத்திலிருந்து சிவன் வந்து கொண்டிருந்த பாதையில் நாரதன் சேவலாய் மாறி கூவினான். சேவல் கூவியதால் பொழுது புலர்ந்துவிட்டதென சிவன் திரும்பி சென்றுவிட்டார். இதனால் மனம் வருந்திய பகவதி திருமணத்திற்கு வாங்கி வைத்திருந்த பூஜை பொருட்கள் மற்றும் உணவு பொருட்களையும் வெளியே எறிந்தார், இதன் வண்ணம் தான் குமரிமுனையின் கடலோர பகுதிகள் அனைத்தும் சிவப்பு, நீலம், மஞ்சள், கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் மணலாக இருப்பதாக நம்பப்படுகிறது,

இக்கோவிலை பற்றி ஏராளமான கதைகள் உண்டு, ஸ்ரீ தேவி பகவதி அம்மனின் மூக்குத்திக்கும் ஒரு வரலாறு உண்டு, அக்காலத்தில் கன்னியாகுமரி அருகில் உள்ள ஒரு ஊர் அகஸ்தீஸ்வரம் [(அகத்தியர் எனும் குறுமுனி இங்கு வந்து இருந்ததாக கதைகள் உள்ளன)அதை பற்றி பின் வரும் பதிவுகளில் பார்க்கலாம்.] இவ்வூரில் மார்த்தாண்ட நாடார் என்பவர் வாழ்ந்து வந்தார், பனை மரம் ஏறும் தொழில் செய்து வந்தார். மாலைவேளைகளில் பனை ஏறுவதை வழக்கமாக கொண்டிருந்தார், ஒரு நாள் நேரம் தாமதமாகிவிட்டது. மரத்தில் இருந்து இறங்கும் போது தரையில் ஓர் இடத்தில் பிரகாசமான ஒளி தெரிவதையும் அதை சுற்றிலும் ஒரு நாகம் இரை தேடுவதையும் கண்டார். சற்று நேரம் மரத்தில் அமர்ந்து அதை பார்த்து கொண்டு இருந்தார். பின்னர் அந்த நாகம் அந்த நாகமணி எடுத்து சென்று மறைந்துவிட்டதாம், தினமும் இச்செயல் அரங்கேறிற்று, அவர் தனது உறவினர், நண்பர்களிடமும் எடுப்பதற்கான வழிமுறைபற்றி வினவினார், அவர்கள் அறிவுரை படி ஓர் அமாவாசை இரவு பெண்கன்றின் சாணத்தை கொண்டு நாகமுத்தை மூடிவிட்டு அதன் மேல் மண்சட்டியால் மூடிவிட்டு மரத்தின் மேல் ஏறி அமர்ந்து கொண்டார், நாகம் திரும்பி வந்தது, மண்சட்டியின் மீது கொத்தியது பின்னர் அவர் அமர்ந்திருந்த பனை மரத்தினை சுற்றி சுற்றி வந்தது மரத்தின் மீது திரும்ப‌ திரும்ப கொத்தியது பொழுது விடிவதற்குள் பாம்பும் மடிந்தது பனை மரமும் பட்டுவிட்டது, பாம்பு இறந்ததை உறுதி செய்துகொண்டு கீழே இறங்கி நாகமுத்தை எடுத்து பின் வீடு திரும்பினார். பின்னர் திருவிதங்கூர் சமஸ்தானத்து மன்னரிடம் சென்றார் அந்த விலை உயர்ந்த முத்தை அவரிடம் கொடுத்தார், மன்னர் அவருக்கு பொன்னும் நிலமும் பரிசாக கொடுத்து, நாக முத்தெடுத்த நாகமணி மார்த்தாண்ட நாடார் என பட்டப் பெயரும் வழங்கினார். அதன் பின்னர் மன்னரின் விருப்பப் படி ஸ்ரீ தேவி பகவதி அம்மனின் மூக்கில் பதிக்கப்பட்டது.

பின்னாளில் இந்த மூக்குத்தி வெளிச்சத்தில் வங்ககடலில் சென்றுகொண்டிருந்த கப்பல் கலங்க‌ரை விள‌க்கம் என கரை திரும்பி பாறையில் மோதி கடலில் மூகியதாகவும் அன்று முதல் இத்திரு கோவிலின் கிழக்கு வாசல் கதவு மூடி கொண்டதாகவும் செவி வழி செய்திகள்,

மூலம்: முன் தலைமுறை செவிவழி செய்தி தொகுப்பு.

மேலும் பல‌ செய்திகள் இளங்குமரியை பற்றி பின் வரும் பதிவுகளில்‍...

16.11.08

_நான் முதல் ப(டி)திவில்‍‍_


எனது முதல் பதிவாய் ஒரு கவிதை
-------------------------------------------------
அன்னையால் பூமிக்கு நான் புதிதானேன் !
புலப்பட்டதை ரசிக்க தொடங்கியதும் புமி புதிதானது !
அணு அணுவாய் ரசிக்க என் இதயம் துளிர்க்கிறது;
காலை கதிரும் கடல் அலையும் கண்ணுக்கு இனிதாய் !
மலையும் மஞ்சும் மனதிற்கு இனிதாய் !
பனியும் குளிரும் உடலுக்கு புதிதாய் !
என் அன்னையின் புன்னகையும்,
என் பிறந்த மண்ணின் மணமும் என்னை வாழ்த்துகிறது !
ஆயிரமாய் கனவுகள், என் தந்தையின் கண்களில் !
எங்களின் எதிர்காலமாய், அவர் தவற விட்ட தருணங்கள் !
நானும் எண்ணுகிேறன், நான் தவற விட்டதை !‌